இந்தியா ஆபீஸ்
பிராட்வே, மதராஸ்
18th October 1907
அநேக நமஸ்காரம்.
ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், ஒவ்வொரு காலத்தே
முயற்சி மிகுதியாலும் தங்களைப் போன்ற பெரியோர்களுக்கு
அடிக்கடி தடிதங்களெழுதிப் புனிதத் தன்மை பெறுவதற்கு அவகாசமில்லாதவனாக
இருக்கின்றேன்.
சென்றமுறை வெளிவந்த 'செந்தமிழ்'ப் பத்திரிகையிலே தாங்கள்
எழுதியிருக்கும் 'வீரத்தாய்மார்கள்' என்ற அற்புத உரையைக்
கண்டு மகிழ்ச்சி பூத்து அம் மகிழ்ச்சியைத் தமக்கு அறிவிக்கும்
பொருட்டாக இக்கடிதம் எழுதுகிறேன்.
தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும்.
தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் 'ஸ்வதேச
பக்தி' என்ற புது நெருப்பிற்குத்தான் நன் வணக்கம் செய்கிறேன்.
"காலச் சக்கரம் சுழல்கிறது" என்று அவ்வுபந்நியாசத்தின்
இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச் சக்கரம்
சுழலவே செய்கின்றது; அந்தச் சுழற்சியிலே, சிறுமைச் சேற்றில்
ஆழ்ந்து கிடந்த 'நீச பாரதம்' போய் 'மஹா பாரதம்' பிறக்கும்
தறுவாய் வந்துவிட்டது.
'தாழ்நிலை' என்ற இருளிலே மூழ்கிக் கிடக்கும் பாரதவாஸிகளுக்கு
மஹா பாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற்
பிறந்திருக்கும் நெருப்பொன்றாகும். அதற்கும் வணக்கம் செய்கிறேன்.
அது வளர்க! ஓம்!
ஸி.சுப்பிரமணிய
பாரதி
குறிப்பு:
ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன் காலேஜ்)
அவர்களும் அவர் தம்பி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரும் தங்களுக்கு
ஸாஷ்டாங்க வணக்கம் கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.